இன்ஸ்டன்ட் பேடா&கலாகண்ட்&ஆரோரூட் அல்வா&பேரீச்சை - வேர்க்கடலை லட்டு&கோவா பர்பி&வெள்ளரி விதை பர்பி&கராச்சி அல்வா
இன்ஸ்டன்ட் பேடா
தேவையானவை: கன்டென்ஸ்டு மில்க் - 3/4 டின், பால்பவுடர் - 1 கப், பிஸ்தா - 10, உருக்கிய நெய் - 3 டீஸ்பூன் + 2 டீஸ்பூன்.
செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் கன்டென்ஸ்டு
மில்க், பால்பவுடர் சேர்த்து கலந்து, அடுப்பை ஆன்செய்து, கலக்கவும். சற்றே கெட்டியானதும், 3 டீஸ்பூன் நெய்ச் சேர்க்கவும். கடாயில் ஒட்டாமல், உருண்டை பிடிக்கும் பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும். சற்றே ஆறியதும், கையில் நெய்த் தடவி, எலுமிச்சை அளவு மாவை எடுத்து தட்டவும். நடுவில் சிறிய பள்ளம் செய்து, அதற்கு மேல் பிஸ்தாவை வைத்து, அழுத்தவும்.
ஒரு மணிநேரம் கழித்து, சற்றே ஈரப்பதம் குறைந்தவுடன், காற்றுப் புகாத கன்டெய்னரில் அடைக்கவும்.
கலாகண்ட்
தேவையானவை: கன்டென்ஸ்டு மில்க் - 1/2 டின், பனீர் - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன், பிஸ்தா - 8, நெய் 1 டீஸ்பூன்.
செய்முறை: பனீரை துருவவும். அடிகனமான பாத்திரத்தில் கன்டென்ஸ்டு மில்க், பனீர் துருவலை கலந்து, அடுப்பை ஆன்செய்யவும். மிதமான தீயில் வைத்து, அல்வா பதம் வரும்வரை கலக்கவும். சற்றே கெட்டியாகி, கடாயில் ஒட்டாமல் வரும்போது, நெய்த் தடவிய தட்டில் கொட்டி, சமன்செய்யவும். வெதுவெதுப்பாக இருக்கும்போது, வில்லைகள் போட்டு, ஒவ்வொரு துண்டின்மீதும் பிஸ்தாவை வைக்கவும்.
குறிப்பு: 2-3 குங்குமப்பூவை, வெதுவெதுப்பான பாலில் 20 நிமிடங்கள் ஊறவைத்து, கன்டென்ஸ்டு மில்க்குடன் சேர்த்தும் செய்யலாம்.
ஆரோரூட் அல்வா
தேவையானவை: ஆரோரூட் மாவு, சர்க்கரை
தலா 1 கப், தண்ணீர் 3 கப், நெய் - 3 டீஸ்பூன்.
செய்முறை: அடிகனமான பாத்திரத்தில், ஆரோரூட் மாவு,சர்க்கரை, தண்ணீர் சேர்த்து, நன்றாகக் கலந்து, அடுப்பை ஆன்செய்யவும். மிதமான தீயில்வைத்து, கிளறவும். முதலில் மாவு சற்று கெட்டியாகும். பின்னர், கண்ணாடிப் பதம் வந்து, கடாயில் ஒட்டாமல், அல்வா பதம் வரும். இப்போது 2 டீஸ்பூன் நெய்யைக் கலக்கவும். பின்னர், நெய்த் தடவிய தட்டில் ஊற்றி, பரப்பவும். சற்றே வெதுவெதுப்பாக இருக்கும்போது, விரும்பிய அளவில் வில்லைகள் போடவும். ஆறியதும் பரிமாறவும்.
குறிப்பு: 3 கப் தண்ணீருக்குப் பதிலாக, 1 1/2 கப் தண்ணீரும், 1 1/2 கப் பாலும் சேர்த்து செய்தால், அல்வா மிகவும் ருசியாக இருக்கும்.
பேரீச்சை - வேர்க்கடலை லட்டு
தேவையானவை: வறுத்த வேர்க்கடலை1 கப்,
பேரீச்சம்பழம் - 15.
செய்முறை: வறுத்த வேர்க்கடலையின் தோலை நீக்கவும். பேரீச்சம்பழத்தின் விதைகளை நீக்கவும். தோல்நீக்கிய வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு, சற்றே கொரகொரப்பாக அரைக்கவும். பின்னர், விதைநீக்கிய பேரீச்சையைச் சேர்த்து, நன்றாக அரைத்தெடுக்கவும். எலுமிச்சையளவு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
குறிப்பு: காய்ந்தத் தேங்காய்த்துருவலை ஒரு தட்டில் கொட்டி, டேட்ஸ் உருண்டைகளைப் போட்டு, புரட்டியெடுத்தும் பரிமாறலாம்.
கோவா பர்பி
தேவையானவை: சர்க்கரை சேர்க்காத கோவா - 200 கிராம், சர்க்கரை - 1/4 கப் + 2 டீஸ்பூன், பாதாம் - 10 (நீளவாக்கில் நறுக்கியது), நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: சர்க்கரை சேர்க்காத கோவாவை கையால் நன்றாக உதிர்த்துக்கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, கோவா, சர்க்கரைச் சேர்த்துக் கலந்து, மிதமான தீயில்வைத்து கிளறவும். சர்க்கரை உருகி, கோவா மென்மையாகி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது, நெய்த் தடவிய தட்டில் கொட்டவும். பின்னர், பாதாமைத் தூவி, சற்றே மிதமான சூடு இருக்கும்போது, வில்லைகள் போடவும். ஆறியதும் பரிமாறவும்.
குறிப்பு: தேவைப்பட்டால், 1/4 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்க்கலாம்
வெள்ளரி விதை பர்பி
தேவையானவை: வெள்ளரி விதை, சர்க்கரை - தலா 1 கப், தண்ணீர் - 1/2 கப், நெய் - 1/4 கப்.
செய்முறை: வெள்ளரி விதையை மிக்ஸியில்
பொடிக்கவும். ஒரு தட்டில் நெய்த் தடவிவைக்கவும். அடிகனமான பாத்திரத்தில், சர்க்கரையுடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில்வைத்து, ஒரு கம்பி பதம் வரும்வரை கொதிக்கவிடவும். பின்னர் வெள்ளரி விதைப் பொடியைத் தூவி, கட்டித்தட்டாதவாறு கைவிடாமல் கலக்கவும். கலவை சற்றே கெட்டியானதும், சிறிது சிறிதாக நெய்ச் சேர்த்து, கைவிடாமல் கிளறவும். பர்பி கலவை நுரைத்து வரும்போது, உடனடியாக ஒரு தட்டில் கொட்டி, சமன்செய்யவும். சற்றே வெதுவெதுப்பாக இருக்கும்போதே, வில்லைகள் செய்ய, கத்தியால் கோடுகள் போட்டுக்கொள்ளவும். ஆறியதும், வில்லைகளாக்கிப் பரிமாறவும்.
கராச்சி அல்வா
தேவையானவை: கார்ன் மாவு - 1/2 கப், நெய் - 2 டீஸ்பூன், சர்க்கரை 1 1/2 கப், தண்ணீர் 2 1/2 கப், முந்திரி - 10, பாதாம் - 6, ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை, ஃபுட்கலர் - 2 சிட்டிகை."
செய்முறை: முந்திரி, பாதாமை நீளவாக்கில்
நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் கார்ன் மாவு, தண்ணீர், ஃபுட்கலர் சேர்த்து, கட்டியில்லாமல் கலந்துவைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் 1 கப் தண்ணீர், சர்க்கரை சேர்த்து, நன்றாகக் கலந்து, அடுப்பை ஆன்செய்யவும். சர்க்கரைக் கரைந்ததும், கார்ன் மாவு கலவையைச் சேர்த்து, மிதமான தீயில்வைக்கவும். கண்ணாடிப் பதம் வந்ததும், நெய், நறுக்கிய பாதாம், முந்திரி சேர்த்து, கலந்துவிடவும். கடாயில் ஒட்டாமல், லேசாகக் கெட்டியாகி, அல்வா பதம் வந்ததும், நெய்த் தடவிய தட்டில் கொட்டி, சமன்செய்யவும். சற்றே சூடாக இருக்கும்போதே வில்லைகள் போடவும். ஆறியதும் பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக